சென்னை: தீபாவளி பண்டியொட்டி சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில்  இன்று காலை 10மணி வரையிலான நிலவரப்படி, 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தீபாவளி 2023 பண்டிகை  வார இறுதி விடுமுறை நாளான 12ந்தேதி வருவதால், பொதுமக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வசதிக்காக 13ந்தேதியும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறைஅறிவித்து உள்ளது. மேலும், தீபாவளிக்கு ஏராளமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழக்கமான பேருந்துகளுடன்  சிறப்பு பேருந்துகளையும் இயக்குவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல 5,920 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி, நாகர்கோவில், பெங்களூர், மதுரை,  திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரிக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள்  https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் நேரடியாக டிக்கெட்டுகளை கோயம்பேடு மற்றும் தாம்பரம் சானடோரியத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 மையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்காக  நாளை ( நவம்பர் 9ஆம் தேதி) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரையிலான நாட்களில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்துகள்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அதேபோல், தீபாவளி விடுமுறையை முடித்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

 அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு  சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல, இன்று காலை வரை 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் முன்பதிவு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும், சென்னையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்த ஆண்டு அரசு போக்குவரத்து பேருந்துகளில் 5.90 லட்சம் பேர் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.