திருச்சி: பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும் அந்த நாள், இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை 100வது தொகுதியாக, 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான, ஸ்ரீரங்கம் மண்ணில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில்  பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

யாத்திரையைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை,  சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக விளங்குவது ஸ்ரீரங்கம் தொகுதி. ஒரே தொகுதியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரும் அருள் பாலிக் கிறார்கள். சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்பதற்கு இங்கு வானுயர உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரமே சாட்சி.

நம் ஸ்ரீரங்கம் கோவிலை அழிக்க பல முயற்சிகள் நடந்தன. 13ஆம் நூற்றாண்டில், மாலிக் காபூர், உலுக் கான் உள்ளிட்ட முகலாய ஆட்சியாளர்கள், தமிழகக் கோவில்களைச் சூறையாடினர். ஸ்ரீரங்கம் கோவிலைக் காப்பாற்ற, 12ஆயிரம் வைணவர்கள் தங்கள் உயிரைத் துச்சம் என்று நினைத்துப் போராடி, கோவிலைக் காப்பாற்றினர்.

சுவாமியை 48ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் வைத்தனர். அப்போது கூட சனாதன தர்மத்தை அழிக்க முடிய வில்லை. இப்போது உதயநிதி சனாதன தர்மத்தை அழித்து விடுவேன் என்கிறார். திமுக, தேர்தலில் வெற்றிபெற்றதும் முதலில் செய்த தாக்குதல் ஸ்ரீரங்கம் கோவிலின் மேல் தான். 2021 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி, ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் 51-ம் பட்டத்துக்கான இடம் காலியாக இருப்பதாகவும் அதற்குத் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து ஒரு விளம்பர அறிக்கை வெளியானது.

ஜீயர் என்னும் பக்தியில் உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, ஏதோ சாதாரண அலுவலகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் நடை முறைகளைக் கொண்டு, இந்து சமய அறநிலையத் துறை, தாமே தேர்ந்தெடுக்க முயன்றது அத்துமீறல்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்குவாசல், நுழைவு கோபுரத்தின் வாயிலில் விரிசல் விழுந்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதுதான் அறநிலையத்‘துறை கோவில்களைப் பாதுகாக்கும் லட்சணம். புகழ்பெற்ற ஜம்பு தீவு பிரகடனம், 222 ஆண்டுகள் முன்பு, ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றில்தான் மருது சகோதரர்கள் ஒட்டப்பட்டது.

வெள்ளையர்களிடம் இருந்து நம் மக்களை காப்பாற்ற அன்று மருது சகோதரர்கள் போராடினார்கள். இன்று திமுக என்ற கொள்ளையர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற நாம் போராடுவோம்.

திமுக அரசு பாஜகவை பார்த்து எத்தனை தூரம் பயப்படுகிறது என்பதற்கு என்றால், ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலம் இட்டதற்கு, அந்தக் கோலத்தை அழித்துள்ளர்கள். தாமரை என்பது பாஜக சின்னம் மட்டுமல்ல. லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி அமர்ந்திருப்பதும் தாமரை மலர் மீதுதான். நமது நாட்டின் தேசிய மலர் தாமரை. ஒரு பக்கம் பாஜக கொடிகளை அகற்றுவது, மற்றொரு புறம் தாமரை கோலத்தை அழிப்பது என, பாஜகவைப் பார்த்து திமுகவின் பயம் வெளிப்படையாகத் தெரிகிறது.

பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள். ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும். ஸ்ரீரங்கம் கோவில் முன்னர் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதேபோல், இந்து கோவில்கள் நிர்வாகத்தை அந்தந்த கோவில் உடையதாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் நிர்வாகம் வரக்கூடாது என்பது பாஜகவின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக உள்ளது.

கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லிய வரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்படும்.   நம்முடைய ஆழ்வார்களிலிருந்து, நாயன்மார்களிலிருந்து அவர்களுடைய சிலைகள் அங்கு வைக்கப் படும்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமிர்த் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ், ரூ.6.18 கோடி செலவில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தைப் புனரமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுக, தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்போம் என்று கூறியது. பட்ஜெட்டிலும் அறிவிப்பு செய்தார்கள். ஆனால் பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. வெறும் அறிவிப்பு மட்டும் செய்தால் போதாது, பேருந்து நிலையம் கட்ட நிதியும் ஒதுக்க வேண்டும்.

இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் கரூர் கல் குவாரி மீது விசாரணை நடத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி இரவு பகலாக, 5,36,250 கன மீட்டர் அளவில் கற்களை வெட்டி எடுத்துள்ளார் என ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர் குவாரிக்கு, மின் கட்டணம் கூட ஒழுங்காக செலுத்துவதில்லை. முறைகேடுகள் செய்வதிலும், மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதிலும் திமுகவினரிடையே போட்டி நடக்கிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு, 1924 ஆம் ஆண்டு, 50 ஆண்டுகளுக்குப் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை 1974 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்கத் தவறிவிட்டார்.

இந்த வரலாற்றுப் பிழையால் அப்போது முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சிக்கல் நீடித்து வந்தது. காமராஜர் ஆட்சி செய்த போது காவிரிக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. எப்போது திமுக ஆட்சி அமைந்ததோ அப்போது தான் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகிய அணைகள், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசால் கட்டப்பட்டன. இவர்களுக்கு மாநில நலனை விட எப்போதும் குடும்ப நலனே முக்கியம்.

2007 ஆம் ஆண்டு, 12 திமுக கூட்டணி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தும், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில், இந்தத் தீர்ப்பை வெளியிடத் தவறியவர் கருணாநிதி. 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு இடையே இருந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் பிரதமர் மோடி.

மேகதாதுவில் நாங்கள் அணை கட்டுவோம் என காங்கிஸ் அரசு பிடிவாதம் பிடிக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் காவிரிக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி பதவியேற்புக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி நதி நீர் குறித்து கர்நாடக அரசிடம் பேசவே இல்லை. சமீபத்தில் மயிலாடுதுறை திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஞானவேலன், “காங்கிரஸை எதிர்ப்பது போல நாம் நடிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்கிறார். தமிழக விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வாங்க மட்டுமே இவர்கள் காங்கிரஸை எதிர்ப்பது போல நடிக்கப் போகிறார்கள். இது தான் இவர்களுக்கு காவிரிப் பகுதி விவசாயிகள் மீது உள்ள கரிசனம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த தமிழக விரோத சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.

இவ்வாறு பேசினார்.