ஜெட்டா

த்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஹஜ் யாத்திரை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார். 

இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் 3-வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு நடக்கிறது.  மாநாட்டில் பங்கேற்க மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று ஜெட்டா சென்றார். ஜெட்டா விமான நிலையத்தில் இந்திய தூதர் சுகேல் கான் மற்றும் தூதரக அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.

அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன், உயர்மட்ட குழுவினரும் சென்றுள்ளனர்.  ஸ்மிருதி இரானி சவுதி ஹஜ் மற்றும் உம்ரா நலத்துறை மந்திரி தவ்பிக் பின் பஸ்வான் அல் ரபியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

அப்போது இந்த ஆண்டுக்கான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  இந்தியாவும் சவுதி அரேபியாவும் 2024 ஆம் ஆண்டிற்கான 1,75,025 யாத்திரிகர்கள் ஒதுக்கீட்டுடன் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்படி, இந்தியாவில் இருந்து ஹஜ் 2024 ஆம் ஆண்டுக்கு மொத்தம் 1,75,025 யாத்திரிகர்களின் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 1,40,020 இருக்கைகள் ஹஜ் கமிட்டி மூலம் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 35,005 யாத்திரிகர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.