சென்னை

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் மர்மநபர்கள் தீ வைத்ததால் மக்கள் அவதியுற்றனர்.

சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் உள்ளது மாட்டு மந்தை மேம்பாலம்.    இதன் அருகில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்துக்கு சொந்தமான  கழிவு நீர் நீரேற்று நிலையம் உள்ளது.    இந்த நிலையத்தின் பின்புறம்   காலி நிலம் ஒன்று உள்ளது.

இந்த இடத்தில் மக்கள் குப்பை கொட்ட ஆரம்பித்து தற்போது மலை போல குப்பை குவிந்துள்ளது.   இது குறித்து பலமுறை புகார் செய்தும் மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த குப்பை மேட்டுக்கு தீ வைத்துள்ளனர்.    கடும் வெயில் மற்றும் காற்றின் வேகத்தால்  இந்த தீ கிடுகிடுவென பரவி உள்ளது.    அனைத்துக் குப்பைகளும் ஒரு சேர எரியத் தொடங்கியதால்  புகை பரவியது.    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.