சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு சிம்புவின் 2 படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘நடிகர்களின் வாழ்க்கை, எளிய மனிதர், ஷாட்டுகளுக்கு இடையே எடுத்த கேண்டிட் படம்’ என அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படத்தில் மண் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இன்னொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் போலீஸ் உடையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படங்களைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் உடனே சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.