நாமக்கல்: டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை என்று குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கடந்த 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடத்தி, அதற்காக பெண்களுக்கு இலவசமாக தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் ஆகியவை அதிமுக வழங்கி வந்தனர்.

அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன. இந்  நிலையில் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தற்போது வீடு, வீடாக சென்று பகல் நேரங்களில் டோக்கன் கொடுப்பதும், அந்த டோக்கனை கொண்டு வரும் பெண்களுக்கு தங்கள் வீடுகளில் வைத்து பட்டுசேலை வழங்கியும் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பகுதியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனின் தொழிற்சாலையில் வைத்து டோக்கன் கொண்டு வரும் பெண்களுக்கு விதிமுறைகளை மீறி இலவச பட்டு சேலைகள் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.