கர்நாடகா முதல்வராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சுமார் 25 நிமிடம் மட்டுமே நீடித்தது.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக சித்தராமையாவை டி.கே. சிவக்குமார் முன்மொழிந்தார்.

இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து சித்தராமையா மற்றும் டி.கே.எஸ். ஆகியோர் ஆளுநர் தாவர்சந்த் கெலோட்-டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்.

மே 20 ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு டெல்லி செல்லும் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் மந்திரிசபையில் இடம்பெறும் மற்ற அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.