சென்னை: தலைநகர் சென்னையில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட எஸ்ஐ, பூரண உடல்நலம் தேறி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  காவல்துறையில் 3 உயர் அதிகாரிகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் கொரோனாவினால் சென்னை போலீசில் 4 உதவி ஆய்வாளர்கள் உள்பட 12 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயரதிகாரிகள் உள்பட அனைவரும் மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தபட்ட பகுதிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் சென்னை எஸ்பிளனேடு போலீஸ் ஸ்டேசனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த அருணாச்சலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் குணமடைந்து இன்று பணிக்கு திரும்பி உள்ளார். அவரை, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.