பிரபல நடிகை ஸ்ரேயா, தனது காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

“எனக்கு 20 உனக்கு 18” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து, மழை,  சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது ஸ்ரேயா, மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார்.

இவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

ஆண்ட்ரே, பல ரெஸ்டாரண்ட்களையும் நடத்தி வருகிறார். சில வருட காதலுக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.

இவர்களது திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் கோலாகலமாக உதய்பூரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை ஸ்ரேயா மறுத்தார்.

இந்நிலையில் அவர் திருமணம் ரகசியமாக நடந்துவிட்டதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது.  கடந்த 12-ம் தேதி மும்பை, அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

திரைத்துறையில் இருந்து இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஷபானா ஆஷ்மி ஆகியோர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். இவர்கள், ஸ்ரேயா வீட்டுக்கு எதிரில் வசிப்பவர்கள்.

திருமணத்தை ஸ்ரேயாவுக்கு நெருங்கியவர்கள் உறுதி செய்துள்ளனர்