கோண்டா ( உ.பி):

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி  ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சித்தது   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அம்மாநில பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்  எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், “பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழில் அதிபர் நிரவ் மோடி 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டது குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாரே” என்று கேட்டார்.

அதற்கு பிரிஜ் பூஷன் சரண், ”நாய்கள் குரைக்கும், ஆனால், யானை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. அதேபோல், பிரதமர் மோடி நாட்டுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறார். எனவே, குரைக்க விரும்புவர்கள் தொடர்ந்து குரைக்கட்டும்” என்று தரம் தாழ்ந்து பதில் அளித்தார்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.