’ பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்’’ -சிவசேனா பகிரங்க அழைப்பு

பா.ஜ,க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ’’ஐக்கிய முற்போக்கு கூட்டணி’’ என்ற ஒரே குடையின் கீழ்  ஒன்று திரள வேண்டும்’’ என சிவசேனா கட்சி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’’வில் நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

’’தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைக்கு பா.ஜ.க.வை தவிரப் பெரிதாக எந்த கட்சியும் இல்லை என்ற நிலை உள்ளது போல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் காங்கிரஸ் தவிர வேறு பிரதான கட்சி இல்லை ‘’ என அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

’’ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் பலம் வாய்ந்த அதிகாரம் உள்ளது. மோடி, அமீத்ஷா ஆகிய சக்தி மிக்க தலைவர்கள் உள்ளனர்’’ என குறிப்பிட்டுள்ள ’சாம்னா ‘’ வலிமையான மாற்று அணியை உருவாக்க வேண்டுமானால் பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்கிற ஒரே குடையின் கீழ் ஒன்று பட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.

‘’ இந்த மாற்று அணியில் தேவகவுடா,மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, நவீன் பட்நாயக் ஆகியோரின் கட்சிகளும், சிவசேனா, அகாலிதளம், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், டி.ஆர்.எஸ் உள்ளிட்டோரின் கட்சிகள் இணைய வேண்டும் ‘’ என அழைப்பு விடுத்துள்ள  சிவசேனா நாளிதழ்,,’இல்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் சிக்கல் தான்’’ என எச்சரித்துள்ளது.

-பா.பாரதி.