சென்னை

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலின் அமைத்துள்ள உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் குறைதீர்ப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் பதவி வகித்து வருகிறார்.   இன்று தமிழக தலைமைச் செயலர் இறையன்பு ஐ ஏ எஸ் அதிகாரி ஷில்பா முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் மின்னணு நிர்வாக சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றுவார் என அறிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,”ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பும், குறைதீர் மற்றும் இ-ஆளுமை பிரிவும் கூடுதல் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக தற்போது பணி புரியும் ஜெயபாலனுக்குக் கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.