சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு செய்யப்பட்டிருந்த  217 இணைப்புகளைத் துண்டித்த சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் மழைநீர் சாலையில் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 17 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதில், சில வீடுகள் மற்றும் வணிக வளாகம், உணவு விடுதிகள் கழிவுநீர் இணைப்பு பெறாமல், முறையற்ற வகையில் சட்டத்திற்குப் புறம்பாக மழைநீர் செல்லக்கூடிய வடிகாலில், கழிவு நீர் இணைப்புகளைக் கொடுத்துள்ளனர்.  இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டும் மழைநீர் வடிகால், பயனற்று உள்ளது. மேலும், கழிவுநீர் கலப்பால், நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் நிலவுகிறது.

சென்னையில் சுமார்  387 கி.மீ. நீளத்திற்கு பேருந்து சாலைகள் மற்றும் 5,524 கி.மீ. நீளத்திற்கு உட்புற சாலைகள் உள்ளன. இவற்றில், 2,071 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது. மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, மழைநீர் வடிகாலில் சேர்க்கப்பட்டுள்ள  கழிவுநீர் இணைப்பை கண்டறிந்து துண்டிக்க, வார்டு வாரியாக குழு அமைத்து சென்னை மாநகராட்சி உத்தர விட்டது.  இந்த குழு தினமும் ஒரு மணி நேரம் மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 217 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மழை நீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றிய வர்களிடம் இருந்து ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 217 கழிவுநீர் இணைப்புகளைத் துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.