சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், “நீர் பாசனம் அதிகமுள்ள நெல் வயல்கள் நிறைந்த சாலைகள், காட்டுமன்னார்கோவில் போன்ற டெல்டா பகுதிகளில் அதிகமாக உள்ளன. இப்பகுதிகளில் சாலைகள் மாநில அளவிலான பொது தரத்தில் அமைக்கப்படுகிறது. இதனால் அந்த சாலைகளின் ஓரம் சேறும், சகதியுமாக உள்ளன. எனவே டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் தரத்திலான சாலைகள் அமைக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “மண் தரத்தின் அடிப்படையில் சாலைகளின் ஆயுட்காலம் அமையும். மண் தரம் சரியில்லை என்றால் சாலைகள் விரைவில் சேதமடையும். மண் உறுதியாக இருந்தால் தான், அதில் அமைக்கப்படும் சாலை 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும். சேறும், சகதியுமான இருக்கும் சாலைகள் 3 ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிடும்.
முதல்வரின் மயிலாடுதுறை சுற்றுப்பயணத்தின் போது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘டெல்டா பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருக்கும்படி மாற்ற வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கூறியிருக்கிறேன். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில், சாத்தியம் என்றால், முதல்வர் மற்றும் நிதித்துறையுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.