செப்டம்பர் 5ந்தேதியான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ மாணவிகளை திறமையானவர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி மகத்தானது.

இன்றைய தினம்  ஆசிரியர்களை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது ஜனாதிபதியான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு ஆசிரியராக பணிபுரிந்து நாட்டின் முதன்குடிமகனாக பதவி உயர்வு பெற்றவர். அவரைப் போற்றும் வகை யிலேயே, அவரது பிறந்தநாள்  ஆசிரியர் தினமாக  ஆண்டுதோறும்  கொண்டாடப்பட்டு வருகிறது.

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888ம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார். பாரம்பரிய தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவரான ராதாகிருஷ்ணன்  படிப்பில் சிறந்துவிளங்கினார். இவரு டைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை அற்றவராகவும் இருந்தார்கள். மூன்றாவது ஆங்கிலக் கல்வியின் நன்மையினைப் பெற்றதோடு அதன் மூலம் எண்ணற்ற நவீன கருத்துகளையும் வழங்குபவராகவும்; மூட நம்பிக்கைகள் மற்றும் அடிமைத் தனத்தை முற்றிலும் எதிர்ப்பராக திகழ்ந்தார்.  அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும் தன்பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.

தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணி யாற்றினார்.  சென்னை பிரசிடென்சி காலேஜ் மற்றும் கல்கத்தா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1931 -36வரையிலான காலகட்டத்தில் ஆந்திரபிரதேச பல்கலைகழத்தின் துணைவேந்தராக பதவிவகித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக 16 ஆண்டுகள் பணியாற்றினார்.

இவர் “சர்” பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார். 1962ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

இவரை கவுரவிக்கும் பொருட்டு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. அவர் எழுதிய The Philosophy of Rabindranath Tagore என்ற புத்தகம், சர்வதேச அளவிலான பார்வை இவர்மீது ஏற்பட முக்கிய பங்கு வகித்து.

இவரின் ஆசிரியப்பணிகள், இவரின் பங்களிப்பு உள்ளிட்டவைகளை கவுரவிக்கும் வகையில், இவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

இன்று ஆசிரியர் தினத்தையொட்டி,   பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகளாக உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்…

ஆசிரியர் என்பவர் கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்

ஓவ்வொரு நாளும் புதிய கருத்துக்களை தருவார் என்ற எண்ணம்  மாணவர்களிடையே மேலோங்கும் வகையில் கற்பிக்க வேண்டும்

பாட தலைப்பை ஒட்டிய தொடர்புடைய பிற கருத்துக்களையும் கூறிய புரிய வைக்க வேண்டும்

மாணவர்களின் பண்பு சார் நடத்தை மாற்றங்களுக்கு உதவி நல்வழிப்படுத்த வேண்டும்.

மாணவரின் தனிதிறமை அறிந்து அதனை வளர்க்க வேண்டும்.

பிற பாட ஆசிரியர் விடுப்பில் இருக்கும் போது எந்த ஆசிரியரை பதிலி ஆசிரியராக மாணவர்கள் அழைக்கின்றார்களோ அவரே மேன்மைக்குரியவர்.

மாணவர்களின் வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களுக்கு பத்திரிகை.காம் (www.patrikai.com) இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.