கோயமுத்தூர்: கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும் கோவையில் நடைபெற்ற தொரில்முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இன்று காலை கோவை வ.உ.சி மைதானத்தில் பொருனை மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சியை  தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று பார்வையிட்டார். அவர்களுடன்,  அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, வெள்ளகோவில் சுவாமிநாதன், தங்கம் தென்னரசு, அன்பரசன், கயல்விழி செல்வராஜ், நீலகிரி எம்.பி.ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகர்ச்சியில்  பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை. உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட வற்றில் கோவை சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரம் கோவை மாவட்டம்.

திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 69 ஆயிரம் கோடிக்கு 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தெற்காசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என செயலாற்றுகிறோம். தமிழகத்தில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபட தொழில்முனைவோரை கேட்டுக் கொள்கிறேன்.

சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது. அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம். கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும். கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்”. கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் தொழில்துறையை காக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. தமிழக அரசு லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பருத்தி மற்றும் நூல் நிலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பட்டறைகள் உருவாக்கப்படும். ரூ.218 கோடி மதிப்பில் 4 தொழிற்பட்டறைகள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிலுவம்பாளையத்தில் தனியார் பங்களிப்புடன் தொழிற்பட்டறை உருவாக்கப்படுகிறது. அரசின் வாய்ப்புகளை தொழில்துறையினர் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவையில் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மனைவியுடன் பார்வையிட்டார்…