சென்னை

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாத 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். உச்சநீதிமன்றம் அவரது கைது சட்டப்படியானது என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னிறுத்தியது. செந்தில் பாலாஜி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தொடர்ச்சியாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது.

இன்றுடன்  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவர் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் செந்தில் பாலாஜியின் காவல் 21 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.