சென்னை

செந்தில் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி அவர் மனைவி தொடுத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி இந்த வழக்கை ஆகியோர் விசாரித்தனர்.

நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை அவர்கள் இருவரும் பிறப்பித்தனர்.  இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.  நீதிபதி ஜெ.நிஷா பானு, அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சட்டவிரோதம். அவரை உடனே நீதிமன்றத்துக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.  நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்/.

.எனவே இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடத் தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.  இன்று இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளதால் இந்த வழக்கை நாளைக்கு விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தார்.