செங்கல்பட்டு

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். தாம்பரம் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. அதில் கொலை வழக்கு ஒன்றுக்காக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக இவருடன் சீனு என்ற சீனிவாசன், மோகன் ஆகிய 3 பேர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர்.

நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள தேநீர்க்கடை ஒன்றில் அவர்தேநீர் குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசி அந்த வெடிகுண்டு தேநீர்க்கடையை ஒட்டியிருந்த சுற்றுச்சுவரில் பட்டு வெடித்தன. அந்த தேநீர்க்கடையிலிருந்த அனைவரும் பதறியடித்து ஓடினர்.

பிறகு லோகேஷை மட்டும் குறிவைத்துத் துரத்திய கும்பல் மற்றொரு வெடிகுண்டை அவர் மீது வீசியதால் நிலைதடுமாறி விழுந்த லோகேஷை அந்த கும்பல் தலை பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர்.

கடந்த 2015 ஆம் வருடம் கொலை செய்யப்பட்ட லோகேஷின் அண்ணன் பாட்சி என்ற பாஸ்கரன் என்பவர் பாலாஜி என்பவரைக் கொலை செய்துள்ளார். பாலாஜியின் கூட்டாளிகள் பாஸ்கரனை அதே வருடம் கொலை செய்து பழிக்கு பழி தீர்த்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது அண்ணனைச் செய்தவரை லோகேஷ் கொலை செய்துள்ளார்.

இக்கொலை வழக்கு சம்பந்தமாக பீர்க்கங்கரணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த போது தான் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளன.