சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை குறித்து,  சிறப்பு நீதிமன்றம் மற்றும்  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்  விசாரிக்க மறுத்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தலைமை நீதிபதி முடிவெடுக்க அனுப்பியது. இதையடுத்து, வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என்று கூறியதுடன்,  செந்தில் பாலாஜியின் வழக்கின் அனைத்து கோப்புகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவை திரும்ப பெற உத்தரவிட்டதுடன், ஜாமின் மனுவையும் முதன்மை நீதிமன்றமே விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.