சென்னை

 தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தபோது, செந்தி பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  பிறகு, நீதிமன்ற காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த இரு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு காரணமாக தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக முன்னிறுத்தப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 12 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.