சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.   அவரது, ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்டவை விசாரணை நடத்த அதிகாரமில்லை என்று மறுத்திருந்தது. இதையடுத்து,  அவரது ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. இந்த அமர்வில் உள்ள ஒரு நீதிபதி, விசாரணையில் இருந்து விலகிய நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து,  செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து,  அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்,  ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளனர். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார்.

ட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக,  செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது.

இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். இதை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.