கோபிச்செட்டிபாளையம்: பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார்.

பிரதமர் மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

அந்த நிகழ்ச்சிகளை 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் அரசு விடுமுறை ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்றார்.

வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.