சென்னை

தேர்தல் பிரசாரம் செய்யும் காங்கிரஸார் தேநீர் செலவுக்குக் கூட பணமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பிரசாரம் செய்வதாகச் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  இன்று இந்தத் தேர்தல் அறிக்கைக்கான தமிழாக்கத்தை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் பெற்றுக் கொண்டார்.

அப்போது செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்,

“சுதந்திரத்திற்குப் பின்னர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடையாக அர்ப்பணித்துள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான்.  காங்கிரஸ் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் நிறைவேற்றியது. பாஜக மற்றும் மோடியால் இப்படி எதையாவது சொல்ல முடியுமா?

தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா வேட்பாளருக்காகக் கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையே ஒரு எதிர்க்கட்சி அல்லது மாநிலக் கட்சி வேட்பாளரிடம் இருந்து எடுத்து இருந்தால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. சும்மா இருந்திருப்பார்களா?  ஆனால் மோடியும், நிர்மலா சீதாராமனும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை.

தமிழகத்தில் பெரிய மாற்றம், பெரிய எழுச்சி இருக்கிறது. அண்ணாமலை நோட்டாவுக்கு மேலே வர முயல்கிறார். பாஜகவிடம் கோடி கோடியாகப் பணம் உள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ செலவுக்குக் கூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரைக் குடித்து கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்.”

என்று கூறினார்.