சென்னை:

ஜாமீனில் விடுதலையான தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் அமலாக்கத்துறையினரால் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக ரூ. 34 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த டிசம்பரில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர்.

சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேருக்கும் கடந்த 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 3 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கட்டப்பட்டனர். இந்நிலையில், இன்று திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ளது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சேகர் ரெட்டியை வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் 12 மணி நேர விசாரணைக்கு பின் சேகர் ரெட்டியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதோடு சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.