சென்னை: விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய், நீா்த்தேக்கங்களில் இருந்து தூா்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் களிமண்ணை விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் பொது மக்களும் கட்டணமின்றி மாவட்ட ஆட்சியா் ஒப்புதலுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி ஏற்கனவே  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வி.இறையன்பு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  கடிதம் எழுதியுள்ளார். அதில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என்பது குறித்து தொழில்துறை 2017-ஆம் ஆண்டிலேயே அரசு ஆணை வழங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள நீா் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்பட்ட ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரு மாதங்களுக்குள் அதாவது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.