சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த  கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை கடந்த 2019-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.  அதன்படி,  14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும், தமிழகஅரசின் உத்தரவு செல்லும் என்று கூறியது.

இதைடுத்து, பிளாஸ்டிக் மீதான உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது,  தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ’தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 36 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கருத்துதெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வெளியே சரளமாக கிடைப்பதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.