நாகர்கோவில்:

ன்னியாகுமரியில் அமைய உள்ள சரக்குபெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளம் அருகே உள்ள இணையம் என்ற பகுதியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு துறைமுகம் அமைந்தால், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி பொது மக்கள், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக துறைமுகம் எதிர்ப்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதற்கிடையில் பாரதியஜனதா கட்சியினர், துறைமுகம் அமைய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினருக்கும் அனுமதி மறுத்து,  போராட்டத்திற்கும் தடை விதித்தனர். மீறி போராடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து,  துறைமுக எதிர்ப்பு குழுவினர் நாகர்கோவிலில் நடைபெறுவதாக அறிவித்த போராட்டத்தை கோவளம் கடற்கரை பகுதிக்கு மாற்றி கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில்,  குமரி மாவட்டத்தின் கடலோர கிராம மக்கள்  ஆயிரக்கணக்கில் திரண்டனர். அவர்கள்,  கட்டுமரங்கள், வல்லங்களை கோவளம் கடல் பகுதியில் வரிசையாக நிற்க வைத்து, அதில் கருப்பு கொடி கடலுக்குள் சென்று, துறைமுகம் அமைப்பதற்கு எதிராக கோஷமிட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

போலீஸ் ஐ.ஜி. தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கன்னியாகுமரி, கோவளம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார்  பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.