ஸ்ரீஹரிகோட்டா:
கடல்சார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ தயாரித்துள்ள, ஐஆர்என்எஸ்எஸ். வரிசையிலான கடல்சார் செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கை கோள், பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடல்சார் செயற்கை கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மீனவர்களுக்கும் பெரிதும் உதவும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் சிக்னல்களை ரிசிவர்கள், புளுடூத் டிவைஸ் போன்ற வற்றின் மூலம் மீனவர்கள் தங்களது செல்போனில் இணைத்து, தகவல்களை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கடல்சார் கண்காணிப்பு, சாலை மற்றும் வான்வழி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இந்த செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்