சென்னை: சென்னையில் கடல் பாலம், மதுரவாயல் உயர்மட்ட சாலை, சென்னை முதல் குமரி வரை 6வழிச்சாலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் 23ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நேற்று சட்டப்பேரவையில், வணிகவரி, பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது அமைச்சர்கள் மூர்த்தி, ஏ.வ.வேலு ஆகியோர் மானிய கோரிக்கை தொடர்பாக பேசினர்.

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சரக்கு கையாளும் திறனை 1.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அளவிலான மத்திய அரசின் திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை செல்லும் உயர்மட்ட சாலை.

விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் நான்கு வழி சாலை.

கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்துதல்.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையை ஆறு வழி சாலையாக தரம் உயர்த்துதல்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி – திருவொற்றியூர் சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடல் பாலம் அமைத்தல் ஆகிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி இடையேயான தூரம் 704 கி.மீ. இந்த தேசிய நெடுஞ்சாலையானது  சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

சென்னையில் இருந்து திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 32 என்றும்,  திண்டிவனம்- விழுப்புரம் இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 132 என்றும்,  விழுப்புரம்- மதுரை இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 38என்றும் , மதுரை- கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 என அழைக்கப்படுகிறது.