டில்லி:

நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணையை முடிக்காத சிபிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

‘‘இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு நீதிமன்றம் பல முறை சிபிஐ.யை வலியுறுத்தியது. ஆனால், சிபிஐ இதன் விசாரணையை முடிவுக்கு கொண்டு வரவில்லை’’ என்று நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இன்று கருத்து தெரிவித்துள்ளது.

‘‘அதனால் சிபிஐ வசம் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.