சென்னை:

ஜெயலலிதா சொத்துகள் தனக்கே சொந்தம் என்று சசிகலா கூறியிருப்பது, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசி வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ருசிகரமாக பதில் அளித்தார்.

இன்று சுனாமி நினைவுதினம் அணுசரிக்கப்பட்டு வரும் நிலையில்,  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக  அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்கு சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்து, படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், கொடநாடு எஸ்டேட் உள்பட ஜெயலலிதாவின் பல்வேறு சொத்துக்கள் தனக்கே சொந்தம் என்று சசிகலா கூறியுள்ள செய்தி குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர்,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றவர், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றம்தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசியவர், திமுக குறித்தும் விமர்சித்தார், இன்று நடைபெற்ற சூரிய கிரகணத்துடன் திமுக ஒப்பிட்டு,  விமர்சித்தவர், மத்தியிலும் மாநிலத்திலும் 13 ஆண்டுகளாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை என்றும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே அதிமுகவின் விருப்பம் என்று கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடுகிறது என்று நக்கலடித்தவர், மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமமும் போடுவது தி.மு.க. தான் என்று விமர்சித்தார்.

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது அ.தி.மு.க. அரசுதான் என்றும்,  மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.