பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சிறையில் தனக்கு தேவையான வசதிகள் பெற, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது, கர்நாடக சிறைத்துறை டிஜஜி ரூபா ஆய்வின்போது தெரியவந்தது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, இளவரசி ஆகியோரை இரவு 7 மணிக்கு மேல், விதிகளை மீறி அவரது உறவினர்கள் சந்தித்த அதிர்ச்சி தகவல்களை டிஐஜி ரூபா வெளியிட்டுள்ளார்.
அதில், தான் பரப்பன அக்ரஹார சிறையை ஆய்வு மேற்கொண்டபோது பல தகவல்கள் தெரிய வந்தது. இதற்கு மூல காரணமாக இருப்பவர் ஜெயில் விசிட்டர்ஸ் பிரிவு பொறுப்பாளராக இருக்கும் கேஎஸ்எப் சப் இன்ஸ் பெக்டர் என்பது தெரியவந்தது என்று கூறி உள்ள ரூபா,
கேஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் மகுநர், பெங்களூர் பரபப்பரன அக்ரஹார சிறையில், சிறை கைதிகளை பார்க்க வரும் விசிட்டர்ஸ் பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார்.
இவர் முன்னாள் ஜெயில் சூப்பிரடண்ட் கிருஷ்ணகுமாரின் அலுவலகத்தில், சிறை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்பும், அதிமுக எம்.பி., எம்எல்எக்கள் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்துள்ள அதிர்ச்சி தகவல் தனது விசாரணையில் தெரிய வந்தது.
அதிமுகவினர் ஒவ்வொரு தடவை சசிகலாவை சந்திக்கும்போதும் குறைந்தது 2 மணி நேரம் சந்திப்பு நடைபெறும் என்றும்
இதுகுறித்து எஸ்.ஐ. கஜராஜ் பதிவேட்டில் எதுவும் பதிவு செய்வது இல்லை என்றும் ரூபா கூறி உள்ளார்.
மேலும், இரவு 7 மணிக்கு பிறகு, சசிகலா உறவினர்களான அதிமுகவை சேர்ந்த டிடிவி தினகரன், இளவரசியின் மகன் விவேக், அதிமுகவின் கர்நாடக மாநில பொறுப்பாளர் வி.புகழேந்தி, சந்தில் ஆகியோர் தினசரி சந்தித்து பேசியுள்ளதும் தனக்கு தெரிய வந்துள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆனால், சிறைத்துறை டிஜிபியோ, சசிகலாவை விசிட்டர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும் என்று கூறி உள்ளதாக ரூபா கூறியுள்ளார். ஆனால், இவர்களோ தினசரி சந்தித்து வந்துள்ளனர்.
சசிகலாவுக்கு இந்த வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக, சிறை அதிகாரி மகுனர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக லஞ்சம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது என்று கூறி உள்ளார்.