சென்னை:

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சரவணபவன்’ ராஜகோபால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

அவரது உடல் அடக்கம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊராரில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல ஓட்டலான சரவணபவன் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்த குமார் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சிறை தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது.

இதற்கிடையில் ஜாமினில் இருந்து வந்த ராஜகோபால், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவர் கண்டிப்பாக சரணடைய வேண்டும் என உச்சநீத மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் சரணடைந்தார். அவரை சிறையில் அடைத்த காவல்துறை அதிகாரிகள், அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் அவரது மகன் சரவணன், தனியார் மருத்துவ மனைக்கு மாற்ற அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை ராஜகோபால் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

சரவண பவன் உரிமையாளர் மறைந்த ராஜகோபாலின் உடல், அவரது சொந்த ஊரில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

ராஜகோபாலின்  சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத்துக்கும், குரும்பூருக்கும் இடையே உள்ள  புன்னையடி எனும் சிறு கிராமம்.