டில்லி

பாஜகவில் இணைந்த சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகளிடம் சிபிஐ பரிவுடன் நடந்துக் கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த 2013 ஆம் வருடம் சாரதா சிட்பண்டில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அதை ஒட்டி ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் குமார் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று 2014ல் அமைக்கப்பட்டது. இந்த ஊழலில் திருணாமுல் காங்கிரசை சேர்ந்த பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகுல் ராய் மீதும் அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தனர். இவர்கள் வீடுகள் சிபிஐ அமைப்பு அதிகாரிகளால் சோதனை எஇடப்பட்டது. அத்துடன் இவர்களிடம் தீவிர விசாரணையும் நடந்தது.

முகுல் ராய் சாரதா சிட்பண்ட் நிறுவனத் தலைவரான சுதிப்தா சென் உடன் நெருங்கிய நட்பில் உளடாக கூறப்பட்டவர் ஆவார். சுதிப்தா சென்னின் கார் ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதில் சென் கொல்கத்தாவில் இருந்து தப்பிச் செல்ல முகுல் ராய் உதவி செய்த விவரங்கள் தெரிய வந்தன.

அது மட்டுமின்றி திருணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் குனால் கோஷ் கைது செய்யப்பட்ட போது சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் முகுல் ராய்க்கு பெரும் பங்கு உள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 2017 ஆம் வருடம் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி முகுல் ராய் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு சிபிஐ இவரிடம் விசாரணை செய்வதை நிறுத்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விடம் கடந்த 2014 ஆம் வருடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அத்துடன் அவருடைய வீடு மற்றும் அவருடைய மனைவிக்கு சொந்தமான செய்தித் தொலைக்காட்சி நிறுவன அலுவலகம் அகிய இடங்களில் சிபிஐ சோதனை இட்டது. அவருக்கு மாதம் ரூ.20 லட்சம் தொகை சாரதா சிட்பண்டில் இருந்து அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன் பிறகு அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு சிபிஐ அவரிடம் விசாரணை ஏதும் நடட்டவில்லை. அது மட்டுமின்ற் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது குற்றப்பத்திரிகை பதியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.