டில்லி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விரைவில் கட்சிப்பணிகளை தொடங்க உள்ளார்..

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயளாளராகவும் உத்திரப் பிரதேச மாநில கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி சொந்த வேலை காரணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவர் நேற்று இந்தியா திரும்பினார். உடனே தனது சகோதரரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பிரியங்காவின் வருகையை எதிர்பார்த்தபடி உள்ளனர். அதை ஒட்டி மாநில காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ஒன்றை ராகுல் காந்தி நடத்த உள்ளார். அதில் பிரியங்கா காந்தி கலந்துக் கொள்கிறார். அத்துடன் இந்த மாதம் 9 ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பிரியங்கா காந்தி சந்திக்க உள்ளார்.

இந்த மாத இறுதியில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளார். அப்போது அவர் செயற்குழு உறுப்பினர்களுடன் வர உள்ள மக்களவை தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்க உள்ளார். அத்துடன் அவர் உத்திரப் பிரதேச மாநில மேற்கு பகுதியில் உள்ள தலைவர்களுடன் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.