மும்பை

காராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருடன் மராட்டிய ஆளுநரை சந்தித்தார்.

தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்து மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அஜித் பவாருடன் தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எட்டு பேர் அமைஸ்சர்களாகப் பதவியேற்றனர்.

அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் அதிருப்தியிலிருந்தார். சுப்ரியா சுலே கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

பாஜக கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளது தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் டிவீட் செய்துள்ளார்.

அவர்,

“மகாராஷ்டிரா அரசியலை ‘சுத்தப்படுத்தும்’ பணியைச் சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும்.  நான் சரத்பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்”

என்று மராத்தியில் பதிவிட்டுள்ளார்.