சென்னை: சேலத்தில்  திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதை பிரபலப்படுத்தும் வகையில், சென்னை அண்ணா சாலை பெரியார் சிலையில் இருந்து சுடர்  தொடர் ஓட்டத்தை  அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி திமுக இளைஞர் அணியின் 2வது மாநில  மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக, , மாநில உரிமை மீட்பு  என்ற முழக்கத்தோடு நடைபெறும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள திமுகவினர், தற்போது சேலம் மாநாட்டு திடல் நோக்கி தொடர் சுடர் ஓட்டத்தையும் முன்னெமுடுத்துள்ளனர்.

இந்த  சுடர் ஓட்டத்தை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து  சுடர் தொடர் ஓட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த சுடர் ஓட்டமான, எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும்.

இந்த சுடர் ஓட்டம், சேலம் மாவட்டத்தை 20.01.2024 அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது.  அதை திமுக இளைஞர் அணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பெற்று,  மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவர் ஸ்டாலின் ஒப்படைப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது திமுக தலைவரிடம் சுடரை  ஒப்படைப்போம் என்றார். மேலும்,   நீட் தேர்வை விலக்க கோரி 85 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம், அதை விரைவில் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியவர்,  ராமர் கோவில் திறப்பு, மத நம்பிக்கை ஆகியவற்றில் திமுகவுக்கு எதிர்ப்பு இல்லை என்றவர், மசூதியை இடித்து கோயில் கட்டியதால் அதற்கு திமுக உடன்படவில்லை என்றார்.

இதுதொடர்பாக  தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.

இந்த சுடர், சென்னை – காஞ்சிபுரம் – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது. சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ஆம் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளேன்.

கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம் – பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.