சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சியின் ஏற்பாட்டின் படி, டிரைவ் இன் கொரோனா சோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகளவு பரவி வருகிறது. நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பரிசோதனைகள் அதிகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சியின் ஏற்பாட்டின் படி, டிரைவ் இன் கொரோனா சோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, புதிய பேருந்து நிலையம் அருகில் டிரைவ் – இன் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன், நகர சுகாதார அலுவலர் கே.பார்த்திபன் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் இந்த மையத்தை தொடங்கினார்.

இது குறித்து ஆணையர் ரவிச்சந்திரன் கூறி உள்ளதாவது: புதிய பேருந்து நிலையமானது நகரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து செல்லக்கூடிய, எளிதில் அணுகம் இடமாகும்.

கொரோனா சோதனை மையம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். சோதனைகள் செய்வதற்கு மருத்துவ குழுக்கள் இங்கேயே உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து உள்ளது. எனவே போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு சோதனைகளுக்கு உட்படுவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எளிதில அடையாளம் காண இந்த நடவடிக்கை உதவும் என்று அவர் கூறினார்.