டெல்லி:
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 6ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை டூ சேலம்  8 வழிச்சாலையானது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களின் வழியாக அமைய உள்ளது.  சேலம் மாவட்டத்தில் சுமார் 36 கி.மீ தூரத்திற்கு, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சாலை வழியானது அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,  விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, தமிழகஅரசு நிலம் கையகப்படுத்தியது.  இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  சுற்றுச்சூழலை அழிக்கும், 8 வழிச் சாலைத் திட்டத்தை  ரத்து செய்து கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் 8ந்தேதி சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து, மத்தியஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்   கடந்த மே மாதம் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அருண்மிஸ்ரா அமர்வு முன்பு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது.
எதிர் மனுதாரர் மனுவை ஒத்தி வைக்கும்படி வாதாடியதன் அடிப்படையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து வழக்கை ஆகஸ்டு 8ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.