சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக நாடு முழுவதும் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல், உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த வேலைநிறுத்ததுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகஅரசு ஆதரவா, எதிர்ப்பா என்பது குறித்து எந்தவொரு அறிக்கையு வெளியிடவில்லை.

இந்த நிலையில், அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு தமிழப கோக்குவரத்து ஊழியர் சங்கங்கள் உள்பட சில தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன. இதனால், தமிழகஅரசின் பணி முடங்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என துறை அமைச்சர்கள், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி,  28 மற்றும் 29ந்தேதிகளில்  அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தின் போது, தமிழக அரசு  போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்; பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் போக்குவரத்துத்துறை  அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.