பாலக்கோடு: 

மீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி, கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டை புதுப்பித்துள்ளார். இந்த வீடு  வரும்  26ந்தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட உள்ளது.

எம்ஜிஆர் வாழ்ந்த பழைய வீடு

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டாக கொண்டாடியது. அவரது நினைவாக சென்னை கடற்கரை சாலையில் நினைவு வளைவும் அமைக்கப்பட்டது. அதோடு மறந்து விட்டது.

இந்த நிலையில்,  கேரளா மாநிலம் பாலக்கோடு மாவட்டம் வடவனூரில், எம்ஜிஆர் குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு சிதிலமடைந்து கிடந்தது. இந்த வீட்டில்தான்  எம்ஜிஆர் சிறு வயதில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இது எம்ஜிஆரின் தாயார் சத்தியபாமாவின் பரம்பரை வீடு என கூறப்படுகிறது.

எம்ஜிஆர் இலங்கையில் அவரது பெற்றோர் வசிக்கும்போது பிறந்ததாகவும், ஆனால் அவர் சிறுவயதிலேயே கேரளாவுக்கு வந்து இந்தவீட்டில் வாழ்ந்து வந்த தாகவும், பின்னர் எம்ஜிஆரின் தந்தையார் மரணத்திற்கு பிறகு, அவரது தாயார் அவரையும், அவரது சகோதரர் சக்கரபாணியையும் கும்பகோணம் அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிற்காலத்தில்  அவர் சென்னையில் குடியேறினாலும் இந்த வீட்டை மறக்கவில்லை. தமிழக முதல்வராக வந்த பிறகுகூட அவ்வப்போது இங்கு வந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  கேரளாவில் உள்ள எம்ஜிஆரின் பூர்விக வீடான அந்த ஓட்டு வீட்டை ரூ.10 லட்சம்  செலவில், எம்ஜிஆர் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடந்த ஆண்டு தொடங்கினார்.

இந்த நிலையில், தற்போது அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அழகிய வீட்டை  வரும் 26-ந் தேதி, கேரளா மாநில கவர்னர் சதாசிவம்   திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சைதை துரைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,

‘மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆர். தனது இளம் வயதில் தவழ்ந்து விளையாடிய வடவனூர் இல்லம் மிகவும் பழுதடைந்து முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும், எந்தவித பராமரிப்பு இன்றி கிடக்கும் இந்த இடத்தை யாருமே சீரமைக்க முன்வரவில்லை என்று செய்திகள் வெளியானது.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், நானே நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி குடும்பத்தினரிடம் முறையான ஒப்புதல் பெற்று, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வி மையம் சார்பில் வீட்டின் தொன்மை மாறாமல் சீரமைத்தது.

எம்.ஜி.ஆர். காலமெல்லாம் நேசித்த மழலையர் அங்கன்வாடி மையம், உணவுக் கூடம், மழலையர் விளையாட்டு திடல், அழகிய புல்வெளி, எம்.ஜி.ஆரின் அருமை யான சுவர் ஓவியங்கள் என கண்ணையும், மனதையும் கவரும் வகையில் இந்த நினைவு இல்ல வளாகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்த நினைவு இல்லம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் அளவுக்கு பொலிவு பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலையும், அவரின் தாய் சத்தியபாமா, தந்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பளிங்கு சிலைகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன.

எம்.ஜி.ஆரின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் அரிய காட்சிகள் அடங்கிய ஒளி நாடாக்கள், அவரது ஆட்சிக்கால சாதனைகளின் ஒளிநாடா காட்சிகள், அவரது அபூர்வ புகைப்படங்களின் கண்காட்சி, எம்.ஜி.ஆர். நடித்த வெற்றி திரைப்படங் களின் சி.டி.க்கள் வெளியீடு என பல்வேறு நவீன சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

இதுதவிர எம்.ஜி.ஆர். குறித்த பல்வேறு பிரபலங்கள், எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் பார்வையிடவும், அவர்கள் விரும்பினால் தங்குவதற்கும், எம்.ஜி.ஆர். பக்தர்கள் தங்கள் இல்ல திருமணங்களை நடத்துவதற்கும், சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாறவும் உரிய வசதிகள் செய்யப்பட உள்ளன. வழிநெடுக பல்வேறு திருத்தலங்களுக்கு செல்பவர்கள், தரிசித்து செல்லும் மற்றொரு திருக்கோவிலாக எம்.ஜி.ஆர். இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு இல்லத்தை கேரளா மாநில கவர்னர் பி.சதாசிவம் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தி னர் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.