பிரிட்டோரியா:
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் சுகாதாரத் துறையின் உதவியுடன் கொரோனா பரவல் குறித்து தீவிரமாக சோதனை செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக ஏராளமான மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பரிசோதித்து உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அமைச்சர் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளைச் சுற்றி அதிகாரிகள் சோதனை மையங்களை நிறுவியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல மற்றும் பிற சுகாதார உதவிகளை வழங்குவதற்காக மொபைல் சுகாதார மையங்கள் மற்றும் நிறுவன வளாக கிளினிக்குகள் உள்ளிட்ட பிற மருத்துவ வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ந்சிமண்டே கூறினார்.

2021 கல்வியாண்டு துவங்குவதால் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா சுகாதார நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.