சென்னை:
மிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா  உடல் நிலை  குறித்து, வதந்தி பரவுவதும், அதன் காரணமாக பதற்றம் ஏற்படுவதையும் தடுக்க முன்வர வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ramdoss_pmk
“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று பிற்பகலில் பரவிய வதந்திகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. விஷமிகள் பரப்பிய வதந்திகளைத் தொடர்ந்து  வேலூர் உள்ளிட்டநகரங்களில் உள்ள கடைகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டி மூட வைத்துள்ளனர். வதந்தியால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தமிழக மக்களும்  இதையே விரும்புகின்றனர்.
இத்தகைய சூழலில் முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது மன்னிக்க முடியாத குற்றமாகும். இத்தகைய சூழல்களில் இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்களை மனிதத் தன்மையற்றவர்கள் என்று தான் கூற வேண்டும். வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது.
முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளால் பல வகைகளில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும் நேற்றிரவு பயணம் செய்ய இருந்தவர்களில் பெரும்பான்மையினர் கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து விட்டனர். கடைகள்மூடப்பட்டதால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
காவல்துறை தலையிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவேண்டுகோள் விடுத்த பிறகு தான் பல இடங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டிய அதிமுகவினரே பல இடங்களில் வதந்திக்கு இரையாகி கடைகளை அடைக்குமாறு மிரட்டியதும், இயல்புவாழ்க்கையை சீர்குலைத்ததும்தான்.
தீப ஒளி திருநாளுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இத்தகைய வதந்திகளும், பதற்றமும் தொடர்ந்தால் அது வணிகத்தையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மிகக்கடுமையாக பாதிக்கும்.
இதைக்கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டிய பெருங்கடமை தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இருக்கிறது.
மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி விட்டதாகவும், அவர்வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேல்சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளனர். இந்த விளக்கம் ஏற்கத்தக்கதாகும்.
நிர்வாகப்பணிகளின் அடிப்படையில் பார்த்தால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே தகவல் தொழில்நுட்பத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உடல் நலம் தேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும்,  ஆளுனர் வித்யாசாகர் ராவும் எழுதிய கடிதங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புவெளியிடப்பட்ட 15 மணி நேரத்தில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 919 வேட்பாளர்கள், மாவட்ட ஊராட்சிஉறுப்பினர் பதவிக்கு 655 பேர் என 1574 வேட்பாளர்களை  அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் தேர்வுசெய்து அறிவிக்கிறார்.
அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியையும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலம் பெற்று விட்டார் என்பதுடன், தமிழக அரசு மற்றும் அதிமுக கட்சிப்பணிகளையும் கவனிக்கத் தொடங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இதை மக்களுக்கு புரியவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஷமிகள் வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவரே வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
1984-ஆம்ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமாகிய எம்.ஜி.இராமச்சந்திரன் அமெரிக்காவின் புருக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது உடல்நிலை பற்றி திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.
அப்போது அமெரிக்க மருத்துவமனையில் அவர் மற்றவர்களுடன் பேசுவது, உணவருந்துவது உள்ளிட்ட அவரது நடவடிக்கைகள் வீடியோவாக பதிவு செய்துவெளியிடப்பட்டன. அதன்பிறகு தான் அவரைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அவரின் உடல்நிலை குறித்த நம்பிக்கை ஏற்பட்டது.
அதேபோல், முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது உடல்நிலை குறித்து காணொலி மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் வீண் பதற்றம் ஏற்படாமலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும் தடுப்பதற்கான சேவையாகக் கருதி இதை முதலமைச்சர் ஜெயலலிதா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.