டில்லி

மாத ஊதியம் பெறுவோருக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் பிரிஜேஷ் உபாத்யாய் கூறி உள்ளார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிற்சங்கம் பாரதிய மஸ்தூர் சங்கம்.   இதன் பொதுச் செயலாளரான பிரிஜேஷ் உபாத்யாய் நேற்று சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களிடையே உரை ஆற்றினார்.

அப்போது பிரிஜேஷ், “இந்தியாவில் உள்ள சட்டத்தின் படி மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு வருமான வரி விதிக்கப் படுகிறது.   ஆனால் அவர்கள் மாத ஊதியமோ அல்லது எந்த ஒரு ஊதியமோ பெரும் போது வருமான வரி விதிக்கக் கூடாது.   முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

ஏனெனில் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலின் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.   ஆனால் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்காக ஊதியம் பெறுகின்றனர்.   வருமானத்துக்கு வரி விதிக்கலாம்.   ஆனால்  ஊதியத்துக்கு விதிக்கக் கூடாது.

உலகத் தொழிலாளர்களில் இந்தியாவில் மட்டுமே மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது.   இதிலும் வரிகள் விதிக்கப்பட்டால்  அவர்களால் எவ்வாறு சேமிக்க முடியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகியும் வேலைவாய்ப்புக் கொள்கை உருவாக்கப் படவில்லை.   மூன்று முறை தொழிற் கொள்கைகள் உருவாக்கப்பட்ட போதிலும் வேலைவாய்ப்புக் கொள்கை உருவாக்கப் படவில்லை.   இதனால் இன்றைய முக்கிய பிரச்னையான வேலைவாய்ப்பின்மை தீர்க்கப் படாமல் இருக்கிறது.” என உரையாற்றி உள்ளார்.