டில்லி

ஆர் எஸ் எஸ் இயக்கம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்  முதல் ராணுவப்பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில்  சேர விரும்புவோருக்குப் பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் நாட்டைக் காக்கும் பணியான ராணுவத்தில் சேர அத்தகைய பயிற்சிப் பள்ளிகள் எதுவும் இல்லை. ராணுவத்தில் சேர விரும்புவோர் உடல் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆர் எஸ் எஸ் இயக்கம் ராணுவப் பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஷிகர்பூரில் அடுத்த ஏப்ரல் மாதம் துவங்க உள்ள இந்தப் பள்ளி ராஜு பையா சினிக் வித்யா மந்திர் எனப் பெயரிடப்பட உளது. ராஜு பையா என அழைக்கபடும் ஆர் எஸ் எஸ் தலைவர் ராஜேந்திர சிங் இந்த ஊரில் கடந்த 1922 ஆம் வருடம் பிறந்தவர் ஆவார். தங்குமிட பள்ளியான இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அமைக்கப்பட உள்ளது. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கல்வி பிரிவான வித்யா பாரதி இந்த பள்ளியை நிர்வகிக்க உள்ளது.

சிபிஎஸ்இ கல்வி முறைப்படி நடக்க உள்ள இந்தப்பள்ளியின் முதல் தொகுதிக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இந்த பள்ளியில் போர்த் தியாகிகளின் குடும்பத்தினருக்கு 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளியின் நடைமுறை குறித்த யோசனைகள் அளிக்க ஓய்வு பெற்ற  ராணுவ அதிகாரிகளின் கூட்டம் ஒன்று செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.