சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் 305 பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கை, அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.8.38 கோடி நிதிஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் வெளியிட்டசெய்திக்குறிப்பில்,  சட்டப்பேரவையில், மானிய கோரிக்கையின் போது ‘‘ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் தேவையின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணவர்கள் வசதியாக கல்விபயிலும் வகையில் 99 நடுநிலைப்பள்ளிகள் 108 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8,060 நீள் இருக்கைகள் மற்றும் 305 பள்ளிகளுக்கு தேவையான இரும்பு அலமாரி ஆகிய அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ரூ.7.46 கோடி செலவில் வழங்கப்படும்” என அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும்பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதன் மூலம் கல்வி கற்பதற்கான சிறந்த சூழலை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில், 99 நடுநிலை, 108 உயர்நிலை, 98 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 305பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கை, இரும்பு அலமாரிகள் டான்சி மூலம் வாங்கி வழங்க ரூ.8,37,91,008 நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு, ஒரு பள்ளிக்கு 20 செட்டுகளும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 40 செட்டுகளும் என மொத்தம் 8,060 மேசையுடன் கூடிய இருக்கைகளுக்கு ஒரு செட்டுக்கு ரூ.10,049 வீதம் 8,060 செட்டுகளுக்கு ரூ.8.09 கோடியும். மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு இரும்பிலான அலமாறி ரூ.11,500 என வீதத்தில் 305 அலமாறிகளுக்கு ரூ.35.07 லட்சமும் நிதி ஒப்புதல் வழங்க அரசிடம் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் துணை பொது மேலாளரிடம் 305 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு தேவையான பொருட்களுக்கு விலைப்புள்ளி பெறப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை ஆணையரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நிதி விடுக்க ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக 305 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு தேவையான மேசையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் இரும்பு அலமாறிகளை தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் மூலம் வாங்கி வழங்குகவதற்கு ரூ.8 கோடியே 37 லட்சம் 91 ஆயிரம் நிதி விடுவிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.