சென்னை:
மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
மொட்டை போடுவதற்குக் கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும்  திட்டத்தை நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.