சென்னை: வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

அதேவேளையில், காவல்துறையினர் இந்த உத்தரவுக்கு ஊடகத்துறையினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  அவர்களுக்கு மட்டும் சலுகை வழங்கி அறிவித்து உள்ளது.

ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தடையில்லை என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.  நம்பர் பிளேட்டில் ஒட்ட தடை உண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பலரது  வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், மற்றும் அரசியல் கட்சிகளின் கொடி, கட்சியின் கலரின் நேம் பிளேட், மற்றும்  நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் அடாவடி நடவடடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன. பல பொறம்போக்குகள் பிரஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு அப்பாவிகளை மிரட்டும் நடவடிக்கைகளும் அரங்கேறின.

இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக குற்றச் செயல்களில் தொடர்புடைய சிலர் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திரும்பி நழுவினர்.

இதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் மதிப்பைவலுப்படுத்தும் வகையிலும் சென்னை காவல் ஆணையர் ஒப்புதலின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல்துறை உட்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடும் நிலை உள்ளது. எனவே, தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஊடகத்துறையினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தங்களது அடையாளங்களை தெரியப்படுத்த சட்டப்படி அனுமதிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை பாயும். அதேபோன்று நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என போக்குவரத்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.