சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மேலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும்  அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி 2022ம் கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.